சொல்லியரத்தா லுன்னைத் துதித்திடவே மகிழும் பரசிவா னந்த வடிவே
எல்லோரும் எப்போதும் ஏற்றங்கள் பல பெறவே எங்கும் நிறைந்து வாழ்
நல்லவள நாயகியே வல்வினைகள் தீர்க்கு
மெங்கள் அன்னயே ப்ரத்யங்கிரா!
சின்னக் குழந்தை ப்ரகலாதனைக் காக்க சீறிய சிங்க வடிவாய்
சொன்ன வண்ணமே தூணில் வெளிவந்த நரசிம்மன் அசுரனை வதை உக்கிரம்
முன்னம்நீ சரபரின் இறக்கையாய் வந்தணைத்து சினம் தணித்திட்ட தாயே
சன்னிதியால் சஞ்சலங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
மதிசூடி விரிசடையாள் துணையாய் காத்யாயனி சாமுண்டா முண்ட மர்தினி
துதிகாளி சாந்தா த்வரிதா வைஷ்ணவீ பத்ரா கருஉருக் கொண்ட சூலி
அதிநீல ஆடையாளே பாச முண்ட சூலமுடன் டமருகச ஸர்ப்ப பாணியும் நீ
கதியாகவே வந்து வல்வினைகளைத் தீர்க்கும் எங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
நெடுநாவில் உதிரம் சிந்தும் நெஞ்சில் நீள கபால மாலை மின்னல் உன்கண் ணாகுமே
படுத்தும் பில்லிசூன்யமகல ராஜசிம்ம வாஹினி நீயே ஏகாந்த யோகினி
துடிப்பான செம்பூவும் படையலுக்குச் செம்பழமும் ஏற்கும் பைரவ பத்னியே
அடுத்துக் கொடுக்கும் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
ஒரு ஆணி வேராய் விளங்கும் மந்திர பீஜமான க்ஷம் அவளுக்கே உவப்பே
இருடியர் அங்கிரஸர் ப்ரத்யங்கிரஸர் எனும் இரு முனிவர் நாம வடிவே
திருப்பாதம் ஆணவத்தைச் சவமாக்கி மேல்நிற்கும் தேவி உபாசகர் காவல்நீ
உருவாக்கும் குரோதங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
பக்தர் மனங்குளிரப் பார்த்து அருள் பொழியும் உன்கண்கள் ஈராயிரம்
கத்தும் கடலலையாய் கதறும்எம் குறை கேட்கும் உன்செவிகள் ஈராயிரம்
புத்தி பிறழாமலே நாம் வாழவே உதவும் உன் கைகள் ஈராயிரம்
சித்தமலம் அறுத்து வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
குண்டலினி சக்திதனை ஆக்ஞையிலே ஏற்றுவிக்கும் அனந்தா வாக்தே வியும் நீ
கண்டார்க் கெல்லாம் களிப்பே ஆவரண பூசைதனில் அணங்க மாலினி யும்நீயே
கொண்டசஞ்சலம் பீதி ஆயாசம் யாவையுமே தீர்க்கும் மாதா கௌலினீ
அண்டங்கள் அனைத்திலும் வல்வினைகள் தீர்க்கும் எங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!
சத்ருபய சங்கட ஸர்ப்ப தோஷ நாசினீ ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
சித்தசுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய் ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
No comments:
Post a Comment