Saturday, August 10, 2024

வாராஹி அனுகிரஹ அஷ்டகம்

அண்டமெலாம் ஆக்கிவைத்து ஆட்டிவைக்கும் நாடகத்தை நன்றாக இயக்குகின்ற நாதன் அந்தஈஸ்வரனே நின்றாடும் உந்தன்மெய் ரூபமதை அறியாமல் திண்டாடும் போதினிலே உன்புகழை பாடலெனக் கொண்டாடிப் பாடிடவே யாருள்ளார் அன்னையளே? வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்



அண்டமதே திருமுகமாய் கொண்டவளின் நாமமதை அன்றாடம் உரைப்பார்க்கு காலபயம் கிடையாதே!

உந்தன் திருநாமமதை உச்சரிக்கும் நொடியினிலே சம்சாரக் கடல்தன்னை சரளமெனக் கடப்பாரே !

நின்நாமம் அதுபோதும் நெடும்பாடல் வேண்டிடுமோ?

வாராகி தாள் சரணம்! வார்த்தாளியே சரணம்


மாறாத நின்நினைவை மனதோடு கொண்டதினால் தீராத ஆனந்தம் கொண்டேனே அம்பிகையே !

கூராக உரோமங்கள் சிலிர்ப்புடனே நின்றிடவே ஓயாமல் இந்தநிலை தொடர்ந்திடவே வேண்டுகிறேன்!

தாயே!நீ தருவாயே! தயவுடனே வரமதனை !

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


இந்திரனும் மூவருமே உந்தன்மலர் பதங்களதை வந்தனங்கள் செய்கையிலே 'அவர்மகுடரத்தினங்கள்.

சுந்தரமாய் உந்தன்கரு மேனியிலே மின்னிடுமே! சிந்தையெலாம் நின்றவளே! துன்பமெலாம் தீர்ப்பவளே!

உந்தன் திருச் சேவையினை உளமாரச் செய்வேனே !

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


பந்தெனவே பூமியதை விளையாட்டாய் தாங்கியொரு விந்தையினை செய்தவராம். வாராக மூர்த்தியவர்

மேனியென ஆனவளே! மங்கலத்தின் வடிவினளே! ராணியென ஈசனவன் மேனியிலே இடமாகி

நானிலத்தை ஆள்பவளே ! நிலவணிந்த நாயகியே !

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


பெண்ணுருவம் கழுத்துவரை மின்னுகின்ற தங்கம்போல் ! கண்மூன்று, பன்றிமுகம் கரம்தாங்கும் சக்கரமே !

அன்னையளே ! வாராகி ! அன்புடனே ஒருமனதாய் உன்னைதினம் பணிவோரின் பதங்களதை இன்பமுடன்

விண்ணகத்து தேவரெலாம் வாழ்த்திடுவார் ஆசியுடன்!

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


எளியோன்யென் பாவமெலாம் கரைந்தோடிப் போனதுவே! வலியவளே ! வாராகி ! நின்சேவை செய்வதனால்…!

மன்னவரும், தேவர்களும், அசுரர்களும், நாகர்களும் என்னடியைப் பணிந்திடுவார் உன்பக்தன் என்பதனால்

என்கின்ற போதெனக்கு முக்தியதும் முக்கியமோ?

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


சிந்தையிலே உனைவைத்தார் சேராத இடமுண்டோ? வந்தனங்கள் செய்வார்க்கு வாய்க்காத பொருளுண்டோ?

நெஞ்சோடு வைத்தார்க்கு "ஆகாது" எனவுண்டோ? தஞ்சமென்று வந்தார்க்கு தோல்வியதும் இங்குண்டோ?

வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்


No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...