சந்திர சேகரி ஷண்முகன் தாயே சங்கரி செளந்தரியே :
இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே :
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
பந்தணை விரலி பர்வத தேவி பவபய ஹாரிணியே
சுந்தர ஈசன் சுருதியும் நீயே சுக சுப ரூபிணியே
சிந்தனை யாவும் உன்னிடம் வைத்தேன் சித்தியின் ஒருவடிவே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
சத்திய வடிவே சற்குண உருவே சதுர்மறை சந்நிதியே
நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நிலைத்திட வருபவளே
வைத்திய மணியே வறுமைகள் போக்க வையகம் வாழ்பவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
வழிபடுவோர்க்கு வரம் தரும் தாயே வந்தருள் வேணியளே
பழிபடு துயரம் பகைதரும் தீமை பகைகளைப் புதைத்தவளே
விழிகளின் அருளால் வினைகளை விரட்ட விளக்கொளி யானவளே
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
அறுபத்து நான்கு கலைகளும் ஆனாய் அன்னையும் நீயானாய்
கருவிடு அரக்கர் கண் பகைகடிந்த கனிமொழி நீ யானாய்
குறுகலர் தம்மை குறுந்தடிப் பாய்ச்சும் குணமணி நீ யானாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
வல்லவள் நீத வஞ்சியும் நீ தான் வசந்தமும் நீயே தான்
நல்லவள் நீதான் நன்னிதி நீதான் நற்சுனை நீயே தான்
சொல்பவள் நீ தான் சொர்ணமும் நீ தான் சொர்க்கமும் நீயேதான்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
நாற்பத்தி மூன்று கோணத்தின் நடுவில் நான்மறை நீ நவின்றாய்
நோற்றிடும் நோன்பின் பலனென வந்தாய் நோய்களை நீ தீர்ப்பாய்
கார்மழை ஆனாய் காவலும் ஆனாய் காத்திட நீ வந்தாய்
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
ஜெய ஜெய புவன ஈஸ்வரி தாயே ஜெய ஜெய ஸ்ரீங்காரீ
ஜெய ஜெய மாயா மங்கள ரூபி ஜெய ஜெய ஹ்ரீங்காரி
ஜெய ஜெய துர்க்கா சண்டிகை காளி ஜெய ஜெய க்லிங்காரீ
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
தீன தயாபரீ பூர்ண கடாக்ஷி காஞ்சி காமாக்ஷி நமோ நமோ
மாதங்க கன்யா மதர மீனாக்ஷி பாண்டியராஜ புத்ரீ
சுந்தர ஹிருதயே சோம சேகரி ஜனனீ மனோன்மணி
புவனங்கள் காக்க புன்னகை பூத்த புவனேஸ்வரி தாயே
No comments:
Post a Comment