ஆனைமுகவா ஆறுமுகவா முன்வருவீர் திவாகரனார் கீர்த்திகளைச் சற்றே தெரிந்துரைக்க
நான்முகனார் தேவியரே நாவில் வரவேண்டுமம்மா புகழுடைய பாரதியே புஸ்தகத்தில் வாழ்பவளே
சதுர்வேத சாஸ்த்திரத்தின் தத்துவத்தின் உள்பொருளே தத்துவத்தின் மெய்பொருளே ஸரஸ்வதியே முன் வருவீர்
கிழக்கில் உதித்துவரும் கீர்த்தியுள்ள மெய்ப்பொருளே
அடியேன் வினையகற்றி ஆட்கொள்ள வேணுமையா
தொட்டிலின் பிள்ளை சிசுக்கள் பிழை செய்துவிட்டால் பிழையாகவெண்ணிப் பெற்றதாய் தள்ளுவளோ
அப்படிப்போலெண்ணி அடியேன் வினையகற்றி அஞ்சாமல் காத்தெனக்கு ஐக்கியபதம் தாருமையா
கதிரவனே மெய்ஞ்ஞானக் கண்கள் தரவேணுமையா ஜோதிசுயம்வடிவே சுத்த வெளியானவரே
சித்தவெளியானவரே என்ஜோதி வெளியாக்குமையா சிஷ்யான் மனதில் உதிக்கும் திவாகரரே
உன்டென்றார் பங்கில் உரையும் பரஞ்சோதி இல்லையென்ற பாமரர்க்கு எட்டாத வஸ்துவே
ஜகத்திற்கதிபதியே சூரியநாராயணரே உலகிற்கொருவரென்று உம்மையன்றோ சொல்லிடுவார்
பிருதிவி ஏழுகடலும் பிரத்யக்ஷமாய் விளங்கும் பிரத்யக்ஷ தேவதையே (உம்)பாதஞ் சரணமையா
இரக்ஷிக்கும் தேவதையே (உம்ம) இணையடியைப் போற்றி செய்தேன் என்னுடைய ஜன்மத்தை ஈடேற்ற வேணுமையா
(நான்) மாயை வலையில் மறித்துவந்து சிக்காமல் பிறவாத மோக்ஷபதம் தாரீர் பெருமாளே
உலகிலுள்ள மானிடர்கள் உய்யும் வழி காட்டவென்று கதிரவனைப் பூஜித்து கடைத்தேற வேணுமென்று
சூரியனைப் பூஜித்தார் ஸுந்தரிகள் மூலவருமாய் அன்னையெனும் பார்வதியும் அதிகாலையிலெழுந்து
ஈஸ்வரியாள் வந்தாள் இலக்ஷப்மியின் தன் மனைக்கு பார்வதியாள் நல்வரவைப் பார்த்து மகாலக்ஷப்மியும்
(தன்) வண்டார்குழலசைய மாலை புரண்டசைய சீரார்ச்சிலம்பார்க்கச் செங்கைவளை ஜோதிவிட
கழுத்துப் பதக்கமின்னக் கங்கணங்கள் ஜோதிவிட மங்கை உமையவளின் மலரடியிலே பணிந்தாள்
தண்டனிட்ட லக்ஷப்மியை தேவிகண்டு அன்புடனே மாதவனார் மார்பில் பிரியாமல் நீ வஸித்து
வாழ்ந்திருக்கவென்று மங்கை உமை வாழ்த்திவிட்டு காலையில் சென்றே நாம் கங்கை தன்னில் நீராடி
இமயகிரிமேலெழுந்த இளங்கதிரைப் பூஜை பண்ணி வருவோம் நாமென்றழைக்கும் மாதுமையாள் சொற்படிக்கு
மகாலக்ஷ்மி தேவியரும் வாணி சரஸ்வதியும் ஸுர லோகமங்கையரும் ஸுந்தரி இந்திராணியுடன்
சங்கரி தேவியுடன் சேர்ந்து வந்தார் கூட்டமதாய் வான நதிக் கங்கை தன்னில் மங்கையர்கள் வந்திறங்கி
மஞ்சள் நீராடி வெண்பட்டால் ஈரமொற்றி கோதிமயிராற்றி குழலுக்குப் பூ முடித்து
ஈரத்துயிலவிழ்த்து ஏற்றமுள்ள பட்டுடுத்தி பத்தினிமார்களெல்லாம் பூஞ்சோலையில் புகுந்து
மல்லிகை முல்லை அரளி இருவாக்ஷியுடன் செந்தாமரைப் பூவும் செங்கழுநீர் புஷ்பமுடன்
ஆனமலர்களெல்லாம் ஆராய்ந்து தானெடுத்து தேனுடனே முப்பழமும் செவ்விளநீர்க்குலையும்
தாம்பூலம் கந்தவகை தட்டினிலே கொண்டுவந்து எட்டாப்பரம்பொருளின் கிட்டவேவந்து நின்றார்
பருவதம்போல் விளங்கும் பசும்பொன்னால் தேர்விளங்க
முத்தால் அலங்கரித்து மாலைகளும் தொங்கவிட்டு
பவழக் கொடுங்கையுடன் பக்கத்தின் சக்கரமும் தங்கத்தினாலமைந்த தட்டுக்களாயிரமும்
குந்தனப் பொன்னாலமைந்த குடைகொடிகள் தான்பிடிக்க தங்கரத்தினத் தாலிழைத்த சாமரைகள் வீசிவர
அருணனென்னுஞ் சாரதியும் ரதமுகப்பிலே அமர்ந்து பச்சைக் குதிரை கட்டிப் பெரியதேர் தான் செலுத்த
சப்த மா தான்பூட்டித் தடந்தேரை ஓட்டிவர அழகான தேர்நடுவில் ஆதித்தன் ஜோதிவிட
ஆயிரம் கிரணங்கள் ஜோதிட ஆதித்தன் வஜ்ஜிரமணிமகுடம் முடியின் மேலேவிளங்க
மகாமேரு பருவதத்தை வளைய வந்து பாஸ்கரனார் உலகத்தோருய்ய உதயகிரி மேலெழுந்தார்
பவனிவரும் சூரியரைப் பத்தினிமார் கண்டுகந்து அதிகபிரியத்துடனே அர்க்கியமுந்தான் கொடுத்தார்
பாதமலம்பி நல்ல பட்டினால் ஈரமொற்றி ஈரமுலரவென்றே இணைகவரியால் விசிறி
புஷ்பத்தால் அர்ச்சித்து போற்றியந்தப் புண்ணியரை கனிந்த பழங்களையும் கதிரவனுக்கர்ப்பிதமாய்
நைவேத்தியம் பண்ணியவாள் நெய்விளக்குத் தானேற்றி பன்னிரு நாமத்தால் பகலவனைத் தான் துதித்தார்
கிருபையுடனே சூரியரும் பூஜை தன்னைத் தான் கிரகித்து புவனேஸ்வரிகளையும் போற்றமன மகிழ்ந்தார்
அவரவர்க்கு ஏற்றவரம் ஆதித்தனைக் கேட்டார் ஈசரிடப்பாகத்தை என்றும் பிரியாமல்
உடனாக வாழ்ந்திருக்க உமையவளும் கேட்டிருந்தாள் இலக்ஷப்மி தேவி இச்சையுடனே யுரைப்பாள்
மாதவனார் தம்முடைய மார்பைவிட்டு நீங்காத வரமெனக்குவேணுமென்று மகாலக்ஷப்மி கேட்டிருந்தாள்
ஸரஸ்வதி தேவியுந்தான் சதுர்முகனார் தம்முடைய நாவைவிட்டு நீங்காத நன்மைகளைத் தாருமென்றாள்.
சாவித்திரி சந்தியை காயத்திரி பிரம்மனுட சிரஸைவிட்டு நீங்காத சிலாக்கியத்தைக் கேட்டிருந்தாள்
அயிராணியப்போ அமரர்கோன் தன்னுடனே சபையைவிட்டு நீங்காத சுகந்தையுங் கேட்டிருந்தாள்
அரிவையர்கள் கேட்டவரம் அப்படியே ஆகவென்று கிருபையுடனே வாழ்த்தி கதிரவனும் வாக்களித்தார்
அழகான தேர்நடத்தி ஆதித்தன் சென்றிடவே ஸுந்தரிமார்களெல்லாம் தங்கள் கிரகத்தையடைந்தார்
சூரியமாலையைச் சொன்னவரும் கேட்டவரும் சொல்லிக் கொடுத்தவரும் சொல்லுவதைக் கேட்பவரும்
மைந்தர்களைப் பெற்றிடுவார் மகிமையுடன் வாழ்ந்திடுவர் இவ்வுலகுக் காட்சிகளும் இகபோகந்தானடைந்து
பக்திமனதுடனே பரதேவி தன் கிருபையால் முக்திபதமான மோக்ஷத்தைத் தானடைவார்
No comments:
Post a Comment