Friday, April 4, 2025

அகர வரிசையில் அனந்த ராமாயணம்| Anantha Ramayan

அனந்தனே அசுரர்களை அழித்து அன்பர்களுக்கு அருள அவனியில் அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரனின் அம்சமாய் அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவோ அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!
அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான். அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.

அடவியிலும் அபாயம்! அரக்கர்களின் அரசன், அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை, அயோத்தி அண்ணல், அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை. அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த அடியாருள் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து, அவர்களின் அரண்களை, அகந்தைகளை அடியொடு அக்னியால் அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி, அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான், அத்தசமுக அரக்கனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து, அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்தது அனுமனின் அருளாலே. அவன் அடி அர்ச்சிப்போம், அனைத்தையும் அருளிடுவோன் அன்பரின் அகம் அறிந்தே!

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...