கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்! - (1)
ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! - (2)
பன்னிறு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே! - (3)
கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! - (4)
சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்! - (5)
குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! - (6)
அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதார போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! - (7)
மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! - (8)
No comments:
Post a Comment