Sunday, January 26, 2025

வைத்திய வீரராகவன் போற்றி பஞ்சகம் தமிழ்| Vaithya Veera Ragavan Potri Panchagam Tamil

தண்ணமர் மதியே சாந்தந் தழைத்த சத்துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுள்ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி!

பாண்டவர் தூதனாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்தும் மாநிதியே போற்றி
தூண்டலில்லாமல் ஓங்கும் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வுள்ளூவர்வாழ் வீர ராகவனே போற்றி!
மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வுள்ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீர ராகவனே போற்றி!

இளங்கொடி தனைக்கொண்டேகும் இராவணன் தனையழித்தே
களங்கமில் விபீடணர்க்குக் கனவரசளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்குநல் எவ்வுள்ளூர்வாழ் வீர ராகவனே போற்றி

அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா போற்றி!
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி!
வற்புறு பிணிதீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வுள்ளூர்வாழ் வீர ராகவனே போற்றி

Saturday, January 25, 2025

கல்பக கணேச பஞ்சரத்னம் தமிழ்| Kalpaga Ganesha Pancharathnam Tamil

சீர்மிக்க சிதம்பரத்தில் நடராஜரது கோயிலின் மேல் கோபுரத்தின் அழகிய கோட்டத்தில் விளங்குபவர், கற்பக மரமாகி அடியார் விரும்புவதை நிறைவேற்றுபவர், நடனத்தில் அடங்கா ஆனந்த மதம் கொண்டவர், துர்வாசர் முதலிய முனிவர்களால் வணங்கப் பெற்றவர், எல்லோருக்கும் மூத்தவர், குறைவற்றவர், அந்த கணபதி நம்மைக் காக்கட்டும்.

தில்லைக்காடு என்ற நகரம் உயிரினம் அனைத்தின் பசியைப் போக்குகிறது என முனிவர்கள் கூறுகிறார்கள். அதன் உண்மை நிலையை அறிய இரவில் வந்த துறவிகளில் சிறந்த துர்வாசரைத் திருப்திப்படுத்தி அவர் விரும்பிய தன் நடனத்தைக் காட்டிய கற்பகமரம் போன்ற கணபதி நம்மைக் காக்கட்டும்.
சிவபெருமானின் நடனம் காண விரும்பி வந்த இந்திரன் முதலான தேவர்களுக்குத் தன் வலது திருவடியைத் தூக்கிக் காண்பித்து அவர்கள் விரும்பியதை அருளி, சொர்க்கம் முதலிய அவரவர் உலகிற்கு அனுப்பினார். அந்த சிவகாமி சிதம்பரநாதனின் மகன் நமக்கு மங்களத்தைத் தரட்டும்.

அமிர்தம் பெற கோவிந்தன் முதலானோரால் வேண்டப் பெற்ற யானைமுக கற்பக கணேசர், நம் முன் தோன்றட்டும். அவர் எல்லோருக்கும் மூத்தவர். நல்ல வாக்கையும், அகலாத செல்வத்தையும், உயர்ந்த ஆத்ம ஞானத்தையும், நன் மனைவி மக்களையும் பெருமையையும் அந்த காத்யாயனீ - சிவனின் மகன் தந்தருளட்டும்.

கற்பக கணபதி, யானைமுகன், தில்லை வாழ் அந்தணர்களால் வேத மந்திரங்களால் திருவடிகளில் பூஜிக்கப் பெற்றவர், உயிரினத்தின் பந்தத்தை நீக்குபவர், தந்தம் முதலிய ஆறு ஆயுதங்களை ஏந்தியவர். விரும்பியதைத் தருபவர் என்ற தகுதியைப் பெற காமதேனுவால் அணுகிப் போற்றப் பெற்றவர், செல்வம் முதலிய வேண்டிய எல்லாம் தரும் கணேசரை வணங்குகிறேன்.

உமாபதி சிவாச்சாரியாரால் செய்யப் பெற்ற, விரும்பியதைத் தருகிற இந்தத் துதியை இரவும் பகலும் படிப்பவன் ஸ்ரீகற்பக விநாயகரின் கருணைக் கடைக்கண் பார்வையால் நாடியது அனைத்தையும் தடையின்றிப் பெறுவான். தன் இறுதி நாட்களில் எல்லா புருஷார்த்தத்தையும் நிறைவுறச் செய்கிற கைவல்யத்தையும் பெறுவான்.

Monday, January 20, 2025

Muniswaran Stotram Tamil| முனீஸ்வரன் ஸ்தோத்திரம் தமிழ்

ஓம் நமச்சிவாய ஓம்! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்! ஓம் நமச்சிவாய!

அர்த்த ஜாம வேளையில் அகிலம் தூங்கும் காலையில் உக்கிரமாய் வருகிறார் உலக நாதன் தளபதி! கச்சை கட்டி வருகிறார்! கையில் தண்டம் ஏந்தியே! கர்ச்ச னையும் புரிகிறார் கடலைப்போல பொங்கியே!

உச்சரிக்கும் மந்திரம் ஓம் கார நாதமாம்! மெச்சு கிற வாத்தியம் மேலைக்கடல் இடிகளாம்! அர்ச்சனைகள் புரிவது ஆடி அடங்கும் தலங்களாம்! இத்தனைக்கும் அதிபதி கால தேவன் தளபதி!

சங்கு நாதசே கண்டி தாரை பரை வாத்தியம் மங்கள மாய் முழங்கிட மகிமை யோடு வருகிறார்! தொங்கும் மீசை கத்தியாம்! துடிக்கும் கண்ணில் சக்தியாம் இங்கி தமாய் நெற்றியில் ஒளிரும் நீறு வெண்மையாய்!

துட்டமிகு தேவதை துடுக்கு செய்யும் யட்சிகள் அத்தனையும் அடக்கவே ஆவேசம் கொண்டு வருகிறார்! கட்டளைகள் போடுவார்! கடுமையாகச் சாடுவார்! அத்தனைக்கும் அதிபதி! ஆனவர்தான் நம்பதி!

காளி ஆடும் வேளையில் கூடத் தாளம் போடுவார்! கால காலன் பூசையில் தாளமோடு ஆடுவார்! சாமமான வேளையில் கோணங் கியாய் மாறுவாய்! சேம நலம் கூறிடச் சித்தர் கோலம் சூடுவார்!

இரவு காலை இடைவெளி இருளும் ஒளியும் சேர்வெளி புரவி மீது ஏறியே புயலைப் போல வருகிறார்! அரியும் அரன் அயனுடன் அன்னை மூவர் போற்றிட புரியும் கடமை விளங்கவே புன்னகையும் புரிகிறார்!

அஞ்செழுத் தை ஓதிடும் அனைவருக்கும் அடிமையாம்! நெஞ்ச மதில் ஈசனை நினைத்த வர்க்கும் அடிமையாம்! தஞ்சமென ஈசனைப் பணிபவர்க்கும் அடிமையாம்! வஞ்ச மின்றி அவர்களை ஆதரிக்கும் வள்ளலாம்!

தில்லை நாதன் சேவடி தினமும் நாடும் எந்தனின் தொல்லை போக்க வருபவர்! தொடர்ந்து என்னைக் காப்பவர்! பிள்ளை களாம் எங்களைப் பெருமையோடு காக்கவே எல்லைக் காவல் தெய்வமாய் என்றும் வாழ்ந்து அருள்பவர்!

என்று வந்த போதிலும் எந்தன் மனம் விழித்திடும்! நன்று ஓதும் மந்திரம் எந்தன் செவி கேட்டிடும்! அந்தப் புரவிக் குளம்பொலி எந்தன் இல்லம் கடக்கையில் சிந்தை யாவும் ஈசனின் சேவடியில் நிலைத்திடும்!

Thandapani Potri Panchagam Tamil| தண்டபாணி போற்றி பஞ்சகம் தமிழ்

1. தமிழ் மண்ணைத் தமிழ் ஆளத் தரணி எங்கும் தமிழ்பரவச் செய்தவனே! போற்றி! போற்றி!! தமிழ் மொழியை உலகம் எல்லாம் ஏத்திப் போற்றத் தனிப் பெருமை தந்தவனே போற்றி! போற்றி!! தமிழ் மக்கள் கடைப் பிடிக்கும் தனிப்பண்பாட்டைத் தலை நிமிரச் செய்தவனே போற்றி! போற்றி!! தமிழ் உருவே! தவநகராம் சிரவை யூரில் தமிழ்த்தண்ட பாணியனே போற்றி! போற்றி!!

2. திரு விரிஞ்சை வேலவனே போற்றி! போற்றி! திகழ் விராலிமலையவனே போற்றி! போற்றி!! வெருவு பகை வினை ஒழிய விரை வாய் வந்தே வெற்றிகளைத் தருபவனே போற்றி! போற்றி!! திருவருளின் தனியுருவாய் அமைந்த சிக்கல் சிங்கார வடிவேலா போற்றி! போற்றி!! மருவு மொரு மயிலவனே சிரவை யூரில் வளர் தண்ட பாணியனே போற்றி! போற்றி!!

3. அடியார்கள் மிகப் போற்ற அருவி சூழ்ந்த அனுவாவி சுப்பிரமணியா போற்றி! போற்றி!! குடியாளும் வேந்தர்களும் குனிந்தே போற்றும் குன்றக்குடிக் குணக்குன்றே போற்றி! போற்றி!! மடிமீது மாதிருவர் அமர்ந் திருக்க மயிலில் உலா வருபவனே போற்றி! போற்றி!! தடியூன்றித் தலை நிமிர்ந்து சிரவை யூரில் தண்டபாணித்திருப்பாதம் போற்றி! போற்றி!!

4. ஓதிமலை ஒண்பொருளே போற்றி! போற்றி!! ஒளிர்குருந்த மலைமன்னா போற்றி! போற்றி!! நீதி நெறி தவறாதோர் நேர்மை யாளர் நெஞ்சில் நிலை நிற்பவனே போற்றி! போற்றி!! பாதிமதி தவழ்கங்கை பாம்பு உலாவும் பரமசிவன் தன்மகனே போற்றி! போற்றி!! சோதிமணிச் சுடர்உருவே சிரவை யூரில் சுவைதண்ட பாணியனே போற்றி! போற்றி!!

5. சென்னிமலைச் செவ்வேளே போற்றி! போற்றி!! செங்கோட்டு வேலவனே போற்றி! போற்றி!! தன்னிகரில் சிவன் மலையில் நெஞ்சை அள்ளும் தனியழகா! சிவகுமரா! போற்றி! போற்றி!! புன்னகையின் பொருள் காட்டிக் கந்த கோட்டம் பொலிகின்ற வளர்பொருளே போற்றி! போற்றி!! இன்னல் ஏதும் வாராமல் சிரவை யூரில் எழில் தண்ட பாணியனே போற்றி! போற்றி!

Sunday, January 12, 2025

திருவாதிரை திருப்பதிகம் | Thiruvadhirai Padhigam

பாடல் எண் : 01
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 02
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு 
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.   

பாடல் எண் : 03
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 04
குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 05
நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து  
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 06
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு 
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.   

பாடல் எண் : 07
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 08
முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம். 

பாடல் எண் : 09
துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.  

பாடல் எண் : 10
பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து 
ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...